Friday, 28 August 2015

பதினெண் சித்தர்கள் சமாதி அடைந்த தலங்கள்

பதினெண் சித்தர்கள் சமாதி அடைந்த தலங்கள்

சித்ரா பலவேசம்


பதினெண் சித்தர்கள் சமாதி அடைந்த தலங்கள் என குறிப்பிடப்படும் இடங்கள் கொண்ட பட்டியல்

1. கொங்கணவர் - திருப்பதி

2. போகர் - பழநி

3. திருமூலர் - சிதம்பரம்

4. பாம்பாடம்சித்தர் - விருத்தாச்சலம்

5. இடைக்காட்டுச்சித்தர் - திருவண்ணாமலை

6. சச்சிதானந்த சுவாமி - வள்ளிமலை

7. கோரக்கர் - போரூர்

8. நந்தீசர் - காசி

9. குதம்பை சித்தர் - மாயவரம்

10. கமலமுனிவர் - திருவாரூர்

11. வான்மீகர் - எட்டக்குடி

12. கட்டமுனிவர் - ஸ்ரீரங்கம்

13. மச்சமுனிவர் - அழகர்கோவில்

14. ராமதேவர் - மதுரை

15. கந்தாநத்தித்தேவர் - வைத்தீஸ்வரன் கோயில்

16. தன்வந்திரி - ராமேஸ்வரம்

17. பதஞ்சலி முனிவர் - திருவனந்தபுரம்

18. கும்பமுனிவர் - சப்தகிரி


108 சித்தர்களின் பெயர்கள்

108 சித்தர்களின் பெயர்கள்

1. திருமூலர். 
2. போகர்.
3. கருவூர்சித்தர்.
4. புலிப்பாணி.
5. கொங்கணர்.
6. மச்சமுனி.
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்.
8. சட்டைமுனி சித்தர்.
9. அகத்தியர்.
10. தேரையர்.
11. கோரக்கர்.
12. பாம்பாட்டி சித்தர்.
13. சிவவாக்கியர்.
14. உரோமரிசி.
15. காகபுசுண்டர்.
16. இடைக்காட்டுச் சித்தர்.
17. குதம்ப்பைச் சித்தர்.
18. பதஞ்சலி சித்தர்.
19. புலத்தியர்.
20. திருமூலம் நோக்க சித்தர்.
21. அழகண்ண சித்தர்.
22. நாரதர்.
23. இராமதேவ சித்தர்.
24. மார்க்கண்டேயர்.
25. புண்ணாக்கீசர்.
26. காசிபர்.
27. வரதர்.
28. கன்னிச் சித்தர்.
29. தன்வந்தரி.
30. நந்தி சித்தர்
31. காடுவெளி சித்தர்.
32. விசுவாமித்திரர்
33. கௌதமர்
34. கமல முனி
35. சந்திரானந்தர்
36. சுந்தரர்.
37. காளங்கி நாதர்
38. வான்மீகி
39. அகப்பேய் சித்தர்
40. பட்டினத்தார்
41. வள்ளலார்
42. சென்னிமலை சித்தர்
43. சதாசிவப் பிரம்மேந்திரர்
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார்
45. ராகவேந்திரர்
46. ரமண மகரிஷி.
47. குமரகுருபரர்
48. நடன கோபால நாயகி சுவாமிகள்
49. ஞானானந்த சுவாமிகள்
50. ஷீரடி சாயிபாபா
51. சேக்கிழார் பெருமான்
52. ராமானுஜர்
53. பரமஹம்ச யோகானந்தர்
54. யுக்தேஸ்வரர்
55. ஜட்ஜ் சுவாமிகள்
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார்.
58. சிவப்பிரகாச அடிகள்.
59. குரு பாபா ராம்தேவ்
60. ராணி சென்னம்மாள் (பெண் சித்தர்)
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி
62. குழந்தையானந்த சுவாமிகள்.
63. முத்து வடுகநாதர்.
64. இராமதேவர்
65. அருணகிரிநாதர்.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள்
67. மௌன சாமி சித்தர்
68. சிறுதொண்டை நாயனார்.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள்.
70. வல்லநாட்டு மகாசித்தர்.
71. சுப்பிரமணிய சித்தர்.
72. சிவஞான பாலசித்தர்.
73. கம்பர்.
74. நாகலிங்க சுவாமிகள்.
75. அழகர் சுவாமிகள்.
76. சிவஞான பாலைய சுவாமிகள்
77. சித்தானந்த சுவாமிகள்.
78. சக்திவேல் பரமானந்த குரு
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்
80. அக்கா சுவாமிகள்
81. மகான் படே சுவாமிகள்
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள்
83. பகவந்த சுவாமிகள்.
84. கதிர்வேல் சுவாமிகள்.
85. சாந்த நந்த சுவாமிகள்
86. தயானந்த சுவாமிகள்
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள்.
89. வேதாந்த சுவாமிகள்
90. லஷ்மண சுவாமிகள்.
91. மண்ணுருட்டி சுவாமிகள்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்).
94. கோட்டூர் சுவாமிகள்.
95. தகப்பன் மகன் சமாதி
96. நாராயண சாமி அய்யா சமாதி
97. போதேந்திர சுவாமிகள்
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்.
99. வன்மீக நாதர்.
100. தம்பிக்கலையான் சித்தர்
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்
102. குகை நாச்சியார் மகான்.
103. வாலைகுருசாமி.
104. பாம்பன் சுவாமிகள்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள்.
106. பெரியாழ்வார் சுவாமிகள்
107. மாயம்மா (பெண் சித்தர்)
108. பரமாச்சாரியார்.

(மலை வாழ் வாழ்கை - புத்தகத்தில் இருந்து பெறப்பட்டது )

கோபுர தரிசனத்தின் மாண்பும் மகத்துவமும்





"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்பது பழமொழி என்பதைக் விட அதை ஒரு வாழ்வியல் தத்துவமாய் கருதிட வேண்டும். ஆலய வழிபாட்டுக்கு செல்ல இயலாதவர்கள் கூட தூரத்தே இருந்து கோபுரத்தை வணங்கிச் செல்வதை இன்றைக்கும் காண முடியும்.

கோபுரங்களை ஸ்தூல லிங்கமாகவும், இறைவனின் பாதங்களாகவும் பாவித்தனர். கோபுர வழிபாடு முழுமையான ஆலய வழிபாட்டுக்கு இனையானது என்ற நம்பிக்கை காலம் காலமாய் இருந்து வருகிறது.

சிற்ப சாஸ்திரத்தின் படி கோவில்களின் அமைப்பானது மனித உடலின் வடிவத்தில் அமைய வேண்டுமென வரையறுத்திருக்கின்றனர். இதனை "ஷேத்திரம் சரீர பிரஸ்தாரம்" என்பர்.

இதனையே திருமூலரும்...

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே"

என்று கூறுகிறார்.

எளிமையாய் விளக்குவதானால்

பாதங்கள் - முன்கோபுரம்
முழங்கால் - ஆஸ்தான மண்டபம்
துடை - நிருத்த மண்டபம்.
தொப்புள் - பலி பீடம்
மார்பு - மகாமண்டபம் ( நடராஜர்)
கழுத்து - அர்த்த மண்டபம் (நந்தி)
சிரம் - கர்ப்பகிரகம்
வலது செவி - தக்ஷிணா மூர்த்தி
இடது செவி - சண்டேஸ்வரர்.
வாய் - ஸ்நபன மண்டப வாசல்
மூக்கு - ஸ்நபன மண்டபம்
புருவ மத்தி - லிங்கம்.
தலை உச்சி - விமானம்.

"தேஹா தேவாலய: ப்ரோக்தோ ஜீவோ தேவ: ஸனாதன:
த்யஜோத்: அஞ்ஞான நிர்மால்யம் ஷோகம் பாவேன பூஜயேத்" என்ற வேத வாக்காலும் இதனை அறியலாம்.

கற்ப மூலிகை சருமத்தைக் காக்கும் குப்பைமேனி..

மூலிகைகள் என்றால் ஏதோ பெரிய மலைக்காடுகளில் காணப்படுவது என பலர் நினைக்கலாம். மலைக்காடுகளிலும் மூலிகைகள் வளர்கின்றன. அதேபோல் நம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் ஏராளமன மூலிகைகள் வளர்கின்றன. நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை.


மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. 
அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. அதில் குப்பைமேனியும் ஒன்று.

குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்தது. இவை தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருப்பதைக் காணலாம். இது இந்தியா முழுவதும் வளரும் செடியாகும்.

குப்பைமேனியை மார்ஜலமோகினி என வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
எனினும் தமிழில் கூறப்பட்டது போல் குப்பைமேனியின் மருத்துவப் பயன்கள் குறிப்பிடப்படவில்லை.

மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும், இலைக்காம்பு 
இடுக்கிலமைந்த பூக்களையும் கொண்டது. இதற்கு அரி மஞ்சரி, பூனைவணங்கி, 
மேனி என்ற பல பெயர்கள் உண்டு.

Tamil - Kuppaimeni

English - Indian acalypha

Telugu - Kuppi-Chettu

Malayalam - Kuppa-meni

Sanskrit - Arittamajarie

Botanical name - Acalypha indica

இதன் இலை, வேர், சமூலம், (முழுச் செடியும்) மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது.

தந்தமூ லப்பிணிதீத் தந்திருபுண் சர்வவிடம்
உந்துகுன்மம் வாதம் உதிரமூ - லந்தினவு
சூலஞ்சு வாசம் தொட்ர்பீ சங்கபம்போம்
ஞாலங்கொள் மேனியத னால்

தேரையர் குணபாடம்

பொருள் - குப்பைமேனி இலையால், பல்நோய், தீச்சுட்டப் புண், பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, வளிநோய், மூலம், நமைச்சல், குத்தல், இரைப்பு, மூக்குநீர் பாய்தல், கோழை போன்றவை தீரும்.

வயிற்றுப் புழுக்கள் நீங்க

குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.

சொறி, சிரங்கு நீங்க

குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.

இலைமேனி யியறிவிளக் கெண்ணெயின்மெய்
யிலயட்டியிலை மேனியை யா

அகத்தியர் குணவாகடம்

பொருள் - குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும்.

குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும்.

குப்பைமேனி இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி ஒருமண்டலம் கற்ப முறைப்படி உண்டு வந்தால் வாய்வுப்பிடிப்பு நீங்கும். சரும நோய்கள் அகலும். சுவாச நோய்கள் நீங்கும். குடல் புழுக்கள் வெளியேறும். மூல நோயின் தாக்கம் குறையும்.

குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் படுக்கைப் புண் மீது கட்டி வந்தால் புண் விரைவாக ஆறிவிடும்.

குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி முதலியவை குணமாகும்.

மூலம், பவுத்திர நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.

குப்பைமேனி சமூலத்தை எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் 8 விதமான பவுத்திர நோய் தீரும் என தேரையர் காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் வெளியேறும்.

குப்பைமேனி செடிகளை குப்பையென எறியாமல் தேவைக்கேற்ப பயன்படுத்தி நலம் பெறுவோம்.


பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை.!


யுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை உச்சரிப்பதற்கு முன் நாடி சுத்தி செய்து கொண்டு, மந்திரங்களை மூச்சுப் பயிற்சியோடு கலந்து அதிகாலையும், மாலை வேளைகளிலும் உச்சரித்து பிராண சக்தியை அதிகப்படுத்திக் கொண்டார்கள் நம் முன்னோர்களான ரிஷிகளும், சித்தர்களும். இன்று விஞ்ஞானம் மனித உடற் கூறுகளைப்பற்றி ஆராயும் போது, அதில் பிராண சக்தியே எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இயங்குவதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதையே ஆக்சிஜன் என்ற விஞ்ஞானப் பெயரால் வழங்குகிறார்கள். 

இப்போது நாம் மணற்பரப்புகளாக காண்பவை எல்லாம் யுகங்களுக்கு முன்பு மலைகளாகவும் காடுகளாகவும் இருந்தவையே. இயற்கையின் சீற்றங்களாலும், நீரின் அடித்துச் செல்லும் வேகத்தாலும், காற்றாலும், தாவரங்களின் வேர்களாலும் உடைக்கப்பட்டு தூளாகிய பாறைத் துகள்களே இந்த மண். இவையெல்லாம் கோடிக்கணக்காண ஆண்டுகளாக நடந்த மாற்றம். இன்னும் பூமியுள்ள காலம் வரையும் நடக்கும். அப்படி ஒரு காலத்தில் மலைப் பாங்கான பகுதி அதிகமாக இருந்த போது, அங்கு வாழ்ந்து வந்த ரிஷிகள் முனிவர்கள், சித்தர்கள் அங்கு காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பதால், குறைந்த காற்றில் இருந்து நிறைய பிராண சக்தியைப் (ஆக்சிஜனை) பெற கண்டுபிடித்த பயிற்சியே பிராணாயாமம். 

மேலும் பிராணாயாமம் மூலம் உடல் திசுக்களில் எல்லாம் ஆக்சிஜனாகிய பிராண சக்தியை நிரப்பி, மனதினால் அந்த ஆக்சிஜனை குண்டலினி என்கிற சேமிக்கப்பட்ட பிராண சக்தியோடு கலந்து தவ சக்தி மூலம் அதை ஓஜஸாக்கி, சுழுமுனை நாடியைத் திறந்து, அது வழியாக மேலேற்றி மூளைப் பகுதியில் உற்பத்தியாகும் தேஜஸ் என்கிற சுரப்பியோடு கலந்து அழியா தேகமும் ஆன்மிக ஞானமும் பெற்றார்கள். ஆன்மிக வாழ்வாகட்டும், இல்லற வாழ்வாகட்டும் விந்துவானது பிராண சக்தி அதிகமாகக் கொண்டு விளங்க வேண்டும். அதற்கு பிராணாயாமம் மிகவும் பயன்படும். முக்கியமாக, குழந்தை பாக்கியத் தடையில் உயிரணுக்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி ஒரு வரப்பிரசாதம். பெண்களுக்கு ஏற்படும் குழந்தை பாக்கியத்தடை சிக்கலில் இந்தப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் பெரும்பாலான தடைகள் நீங்கும். 

மேலும் ஒரு இரகசியம் என்ன வென்றால் உடலில் காரத் தன்மையையும், அமிலத் தன்மையையும் தீர்மானிப்பது ஆக்சிஜனே. இந்த இரு தன்மைகளே ஆண் குழந்தையா, பெண் குழழ்தையா என்பதையும் முடிவு செய்கின்றன. பெண்களுக்கு குழந்தை பாக்கியத் தடை ஏற்படும் காரணங்களைப் பற்றி பார்த்தால், 

1. பாதிக்கட்ட பெண்ணின் பாலுறுப்புகளில் இருந்து தகவல் மூளைக்கு செல்வதில்லை. 

2. பாதிக்கப்பட்ட பெண்ணின் உறுப்புகளின் செல்பாட்டிற்கான கட்டளைகள் மூளையில் இருந்து வருவதில்லை. 

3. பெண்ணின் உறுப்புகளில் உள்ள திசுக்களுக்கு தேவையான புரத உற்பத்திக்கான நொதிகள் நாளமில்லா சுரப்பிகளான பிட்யூட்டரியிலிருந்தும், அட்சினல் சுரப்பியிலிருந்தும், கருவகங்களில் இருந்தும் சுரக்காதது அல்லது அதற்கான கட்டளை மூளையிலிருந்து வராதது. 

4. சரியான உணவுப் பழக்கம் இல்லாதது. 

5. ஆக்சிஜன் பற்றாக் குறை. 

6. பாலின உறுப்புகளில் இருந்து கழிவுகள் நீங்காமல் இருப்பது. 

இந்தக் காரணங்களால் கருமுட்டை உற்பத்தி ஆகாமல் போவது, கொழுப்பு திரண்டிருப்பது, கருப்பை மூடியிருப்பது, மாதத் தீட்டு ஏற்படாமல் இருப்பது போன்ற குறைகள் ஏற்படும். இதில் பிராணாயாமம் எப்படி இந்த பிரச்சனையை சீர் செய்யும் என்றால், இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும் போது, அதிகப்படியான ஆக்சிஜன் திசுக்களுக்கு கிடைக்கிறது. கார்பன் டை ஆக்சைடு அதிக அளவில் வெளியேறுகிறது. பெண்களின் பாலுறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கும் படிக்கு நரம்புகளின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன(தகவல், கட்டளை ஒருங்கிணைப்பு). திசுக்களின் கடினத் தன்மை போய் மென்மை அடைகிறது. இ,த்த பிளாஸ்மா பெண்களின் பாலுறுப்புகளுக்கு எளிதாகச் செல்கிறது. 

இரத்தத்தில் ஆக்சிஜன் அடர்வு அதிகரிப்பும், திசுக்களில் கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பும் ஏற்பட்டு, பரிமாற்ற வேகம் அதிகரிக்கிறது. இதனால் பெண்ணின் உறுப்புகளின் செயல்பாடுகள் மிகுந்திடுகின்றன. இதோடு கூட சலபாசனம், தனுராசனம்,பஸ்சிமோத்தாசனம், ஹாலாசனம், சர்வாங்காசனம், மத்ஸ்யாசனம், சிரசாசனம். யோகமுத்ரா, பத்மாசனம், உட்டியாணம், நௌலி, சவாசனம் போன்ற ஆசனங்களையும் கற்று செய்து வந்தால் மிக விரைவில் பலன் கிடைப்பதோடு, அறிவான ஆரோக்யமான பிள்ளைகள் பிறக்கும் என்பது உறுதி. ஆண்களும் குழந்தை பாக்யத் தடை நீங்க இந்த ஆசனங்களையும், பிராணாயாமம் பயிற்சியையும் செய்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். தனுராசனமும், யோக முத்ராவும் ஆண்கள் செய்ய வேண்டியதில்லை. அர்த்த மத்ஸ்யேந் திராசனம் செய்வது நல்லது. பிராணாயாமம் செய்யும் போது உட்டியாணா ஜாலந்திர மூலபந்தங்களுடன் கும்பகம் செய்ய வேண்டும். இதனால் ஆண் இனப்பெருக்க மண்டலங்களுக்கு இரத்த நாளங்கள் அதிகமாக இரத்தத்தை அளிக்கும். 


ஆக்சிஜன் குறைபாடு உள்ளவர்களுக்கு உடலில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். அமிலத்தன்மை அதிகம் உள்ளவர்களுக்கு பெண்குழந்தைகள் பிறக்கும். ஆக்சிஜன் அதிக அளவு பெறுகிற உடல் அமைப்பு பழக்க வழக்க முள்ளவர்களுக்கு காரத்தன்மை அதிகமான உடல் அமைப்பு இருக்கும். இவர்களுக்கு ஆண் குழந்தைகள் அதிகம் பிறக்கும். மலைப் பிரதேசங்களில் ஆண்குழந்தைகளைவிட பெண்குழந்தைகள் அதிகம் பிறப்பதன் காரணம் இதுதான். ஆக்சிஜன் நம் உடலில் வெப்பக் கட்டுப்பாட்டுக் காரணியாகத் திகழ்கிறது. புரதங்களை உற்பத்தி செய்கிறது. வளர்சிதை மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இதயத்தின் இடது ஆரிக்கிள், இடது வெட்ரிக்கிள் அறைகளில் ஆக்சிஜன் செல்லும் போது மின் சக்தியை இரத்தத்திற்கு அளிக்கிறது. இந்த மின் சக்தி நம் உடல் முழுவதும் பரவயிருக்கிறது.

இறையிடம் தஞ்சம்


இறையிடம் தஞ்சம்


தடம் தெரியாத பாதை
இதில் தடுமாற்றம் ஆயிரம் 
இனம் புரியாத சுகம் 
இதனை இகழ்வோர் பல்லாயிரம்
உரமுள்ள நெஞ்சம் வேண்டி
இறையிடம் தஞ்சம் !

மகா அவதார் பாபாஜி


பாபாஜி கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கி.பி.30.11.1203 அன்று கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத் திருநாளன்று ரோகிணி நட்சத்திரம் ரிஷபராசி கூடிய சுப வேளையில் பிறந்தார். அவருடைய குழந்தை திருநாமம் நாகராஜ். அவருக்கு 11 வயதானபோது கி.பி.1214ல் இலங்கை சென்று கதிர்காமம் என்னும் திருத்தலத்தில் மகா சித்தர் போக நாதரை சந்தித்தார். பாபாஜி கி.பி.1203 ல் தம் பிறப்பு கி.பி. 1214 கதிர்காமம் சென்று போகரை சந்தித்தது பற்றியும் கி.பி.1952ல் ஒளி உடலோடு சென்னை வந்து எழும்பூர், சூரம்மாள் தெரு, 9ம் எண் வீட்டிலுள்ள தம் சீடர் V.T நீலகண்டன் பூஜையறையில் அவரை சந்தித்து அவரிடம் பலமுறை கூறியுள்ளார். ( போகநாதர் கதிர்காமம் தேவாலயம் முருகன் கோவிலாக எழுவதற்கு முன் அந்த கோவிலில் இரண்டு முக்கோணங்களாலான மிகவும் சக்தி வாய்ந்த ஒரு யந்திரத்தை பிரதிஷ்டை செய்தார். கதிர்காமம் திருக்கோவிலின் மூலஸ்தானத்தில் இப்போதும் உருவச்சிலை கிடையாது. அந்த யத்திரத்திற்குத்தான் வழிபாடு நடக்கின்றன.)


கதிர்காமம் சென்ற பாபாஜி அங்கு மகா சித்தர் போக நாதரை குருவாக அடைந்தார். மிகப்பெரிய ஆலமரத்தடியில் போக நாதர் அவருக்கு தொடர்ந்து 6 மாத காலம் கிரியா யோகப் பயிற்சி அளித்தார். இப்பயிற்சி இடைவிடாமல் தொடர்ந்து நடந்தது. இப்பயிற்சியில் 18 வகையான ஆசனங்கள், பல்வேறு பிராணயாமப் பயிற்சிகள் தியானமுறைகள் ஆகியவை அடங்கும். இந்த தவயோக பயிற்சி ஒவ்வொரு முறையும் 24 மணி நேர பயிற்சியாக தொடர்ந்தது. பிறகு விட்டு விட்டு இரண்டு அல்லது மூன்று நாடகளுக்கு ஒரு முறை என்று வளர்ந்தது. இது வார கணக்காக பெருகி இடைவிடாமல் 48 நாட்களுக்கு செய்யும் அளவிற்கு உயர்ந்தது. ஆறு மாத முடிவில் பாபாஜியின் மனதில் ஐம்புலன்களின் வழியே உலகியலோடு தொடர்பு கொள்ளும் நிலை அகன்றது. வேறு வகையில் கூறினால் மனிதனின் 36 தத்துவங்களில் 20 தத்துவங்களால் ஆன மனோதேகமே அவருக்கு இல்லாமல் போய்விட்டது. அல்லது அவரது மனித மனம் அவரது ஆன்மாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. 

பாபாஜி ஒளி உடலோடும் பூத உடலோடும் வாழும் மனிதராகவே விட்டார். எல்லா தத்துவங்களையும் ஏகத்துவமான ஆன்மாவே தான் என்பதை உணர்ந்தார். அதன்மூலம் தாம் வேறு பரம்பொருள் வேறு அல்ல என்பதை தெளிவாக உணர்ந்து விட்டார். 

தன்னை உணர்ந்த பாபாஜி கி.பி.1214லிலேயே தம் குருநாதர் போகநாதர் ஆணைக்கிணங்க இலங்கையில் இருந்து தமிழகம் வந்தார். பொதிகை மலையில் ஒளி உடலுடன் வாழ்ந்துவரும் போகரின் குருவான அகத்தியரிடம் கிரியா யோகத்தின் கடைசி தீட்சையைப் பெற திருகுற்றால மலையை அடைந்தார். (அகத்தியரே ஆதிகுருவும், கிரியா யோகத்தின் மூலகுருவும் ஆவார்.)

குற்றால மலையில் பாபாஜி அகத்தியரை நினைத்து 48 நாள் கடுந்தவம் புரிந்தார். 48ம் நாள் முடிவில் அகத்தியர் ஒளி உடலோடு அவர் முன் தோன்றி அவரை உள்ளம் குளிர வாழ்த்தி அருளினார். அதோடு "மகனே நீ இமய மலைக்கு சென்று பத்ரிநாத்தில் தங்கி தவ வாழ்க்கை வாழ்ந்து வருவாயாக" "நீ இது வரை உலகம் காணாத அளவிற்கு மிகப்பெரிய சித்த புருஷனாக உயர்ந்து உலகம் உள்ளளவும் வாழ்ந்து வருவாய்" என்று வாழ்த்தி மறைந்தார். 

ஆதிகுரு அகத்தியர் ஆணைப்படி பாபாஜி இமய மலையின் ஒரு முகட்டில் தவக்குடில் அமைத்துக்கொண்டு இன்றும் வாழ்ந்து வருகிறார். பாபாஜியின் தவக்குடில் இமயமலையில் 10000 அடி உயர்த்திற்கு மேல் உள்ள பத்ரி நாத் கோவிலிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. அந்த தவக்குடிலுக்கு கொரிசங்கர் பீடம் என்று பெயர்.

பாபாஜி தம் இமாலய வாழ்க்கையில் 12 ஆண்டுகளுக்கு பாரத நாட்டிற்கு வந்து செல்கிறார். கிரியா யோகத்தின் விளைவாக அவரது உடலில் உள்ள எல்லா உயிரணுக்களும் தெய்வீக அணுக்களாய் மாறி உள்ளதால். அவர் தோன்றி 1800 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட 16 வயது சிறுவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

கடவுளைக் காணும் ஆர்வம் மிக்கவர்களாகவும் கடவுளை காணும் வழி தெரியாமல் தவித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு உதவி செய்து வாவர்கள் தெய்வீக உணர்வை பெறுவதற்கு உதவி செய்வதையே பாபாஜி தம் குறிக்கோளாக கொண்டிருக்கிறார். இந்த தெய்வீக ஞானத்தை பெற்றிடும் மக்கள் இதை யாரிடம் இருந்து பெற்றோம் என்று அறிந்துகொள்ள முடியாத நிலையில் கூட கிரியாயோகப்பயிற்சியை அளித்து வருகிறார்கள்.


கிரியா யோகப்பயிற்சியை லாஹிரி மகாசாயா மூலம் உலகம் முழுவதும் பரவச்செய்ய பாபாஜி முடிவு செய்துவிட்டார். ராணுவத்தில் பணி செய்து கொண்டிருந்த மகாசாயா பாபாஜியின் மூலம் தடுத்தாட்கொள்ளப்பட்டார். 

லாஹிரி மஹா சாயர் (மஹா அவதார் பாபாஜியின் சீடர்) 

மஹா அவதார் பாபாஜி இந்த உலகத்திற்கு தெரிய, பாபாஜி பயன்படுத்திய முதல் கருவி லாஹிரி மஹா சாயர் தான்.மஹா அவதார் பாபாஜி முதலில் காட்சி கொடுத்தது இவருக்கு தான். கிரியா யோகத்தை முதலில் பாபாஜி கற்று கொடுத்தது இவருக்கே. இவரின் இயற்பெயர் ஷாமா சரண் லாஹிரி. அனைவரும் இவரை லாஹிரி மகாசாயா என்று அழைத்தார்கள்.(மகாசாயா என்றால் விசாலமான அறிவு உடையவர் என்று பொருள்.)

குழந்தை பருவம் :

இவர் 30 தேதி, செப்டம்பர் மாதம்,1828 -ல் வங்காள மாநிலம், நதியா மாவட்டத்தில், குர்னி என்ற கிராமத்தில் பிறந்தார்.இவரது பெற்றோர் கௌர் மோகன் லாஹிரி மற்றும் முக்தாக்ஷி .பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் சிறுவதிலேயே, அவரின் அன்னை இறந்து விட்டார். லாஹிரி மகாசாயர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். நான்கு வயதில் இருந்தே தியானம் செய்வதைக் கற்றுக் கொண்டார். தலையைத் தவிர மற்ற உடல் பகுதி முழுவதும் மண்ணுள் புதைத்துக் கொள்ளும் தியான முறையை கையாண்டார்.

அவரது வீடு, ஒரு பெரும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. ஆகவே அவர் குடும்பதினோடு வாரணாசிக்கு சென்றார்.தான் வாழ்நாளின் மீத பகுதியை அங்கேயே கழித்தார். பிள்ளை பருவத்திலேயே ஹிந்தி, உருது அறிந்திருந்தார். பின்னர் பெங்காலி, சமஸ்கிருதம், பாரசீகம்,பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தை அரசு சமஸ்கிருத கல்லூரியில் கற்று கொண்டார். கங்கையில் நீராடி விட்டு, வேதங்களையும், புராணங்களையும் அங்கேயே கற்று கொண்டார்.

இளமைப் பருவம் :
 

கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ,ஆங்கிலேய ராணுவத்தில் கணக்காளராக பணி ஆற்றினார். 1846 -ல் ஸ்ரீமதி காஷி மோனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள்.லாஹிரி மாஹசாயரின் தந்தை இறந்த பின், குடும்ப பொறுப்பை தானே ஏற்றார்.

அப்போது மகாசாயவிற்கு 33 வயது.1861 -ல், இமாலயத்தின் அடிவாரத்தில் உள்ள "ராணிகட்" என்ற இடத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அதுதான் அவர் வாழ்கை முறையில் ஒரு திருப்பத்தைக் கொண்டு வந்தது. ராணிகட் சென்றவுடன் மகாசாயவிற்கு கிடைத்த முதல் செய்தி அந்தப் பகுதி ஏராளமான ஞானிகள் வாழும் பகுதி என்பதுதான். அந்த ஞானிகளை காண வேண்டும் என்ற மிகுந்த ஆசையில் அவர் மலை மீது ஏறினார்.

மஹா அவதார் பாபாஜி ஆட்கொள்ளல்:

அவர் மலைப் பாதையில் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு குரல் அவரை அழைத்தது. மேலும் அவர் அக்குரலை கேட்டுக் கொண்டே மலையின் மீது ஏறிச் சென்றார். அப்போது தான், கிரியா யோகத்தின் ஒளி விளக்கான "மஹா அவதார் பாபாஜி" யை சந்தித்தார். 

அப்போது அவரை மஹா அவதார் பாபாஜி தன் முதல் சீடராக ஏற்றுகொண்டார். கிரியா யோக வித்தைகளை அவருக்கு கற்று தந்தார். உலகுக்கு எல்லாம் கிரியா யோகத்தைப் பரப்புமாறு மஹா அவதார் பாபாஜி, லாஹிரி மகாசாயருக்கு கட்டளை இட்டார். 

பின்பு அவர் வாரணாசிக்கே திரும்பி வந்து, கிரியா யோகத்தைப் பற்றியும், மஹா அவதார் பாபாஜியை பற்றியும் எல்லாருக்கும் எடுத்து உரைத்தார். அங்குள்ள அனைத்து மக்களும் கிரியா யோகத்தை தெரிந்துகொள்ள முனைந்தனர்.

லாஹிரி ஒரு குழுவை அமைத்து கிரியா யோகத்தை பற்றி மக்கள் அறியுமாறு செய்தார். கிரியா யோகத்திற்கு மதம் முக்கியம் இல்லை. ஆகவே இந்து,முஸ்லிம், கிறிஸ்து ஆகிய மதத்தினருக்கும் கற்று தரப்பட்டது.

1886 வரை கிரியா யோகத்தின் ஆசிரியராக விளங்கினார். பின்பு அனைத்து மக்களும் அவரது தரிசித்து சென்றனர். 26 செப்டம்பர், 1895 -ல் , தன் அறையில் அமர்ந்து யோகம் செய்து கொண்டிருக்கும் போது, அனைவரது பார்வையின் எதிரே யோக நிலையிலேயே இறைவன் அடிசேர்ந்தார்.

இவருக்கு பின், அவரின் சீடர்களான ஸ்ரீ பஞ்சனன் பட்டாச்சார்யா, ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர், ஸ்ரீ யுக்தேஸ்வர், சுவாமி பிரபானந்தா, சுவாமி கேஷபானந்தா போன்றோரால் கிரியா யோகம் மக்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. 

சென்னை சாந்தோம் பகுதியில் பாபாஜி ஆஸ்ரமம் ஒன்று உள்ளது. இங்கு வழிபாட்டுக் கூடமும் பயிற்சிக்கூடமும் உள்ளன.

பாபாஜி அய்யா திருவடி போற்றி.

மகாசாயா அய்யா திருவடி போற்றி.

முற்றும்.

சட்டைமுனி (நாதர்)


இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார். சட்டைமுனியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்று தாய்தந்தையர்க்கு உதவி வந்தார்.

ஒருநாள் கோவில் வாசலில் பிச்சைக்காக நின்று கொண்டிருந்த போது வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டார். அவரிடம் ஏதோ ஒரு அபூர்வ சக்தி இருப்பதாக உணர்ந்த சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார். போகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் கொங்கணர், கருவூரார் முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.

இவர் ஞானத்தை மனித குலம் முழுமைக்கும் உபதேசிக்க முயன்றார். தம் சாதனைகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரிடையாக எழுத ஆரம்பித்தார். புரியாத பரிபாஷையில் எழுதாமல் வெளிப்படையாக எழுதுவதைத் தடை செய்வதற்காக சித்தர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். சட்டைமுனியின் நூல்களை குகையில் வைத்து பாதுகாக்கும்படி சிவபெருமான் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார். இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென அவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கக்ப்பட்டு விட்டன. ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன.

அரங்கனின் அற்புத தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி “அரங்கா!” என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின் ஜீவ சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது. இத்தகவல் மரு.ச.உத்தமராசன் எழுதிய “தோற்றக் கிராம ஆராய்ச்சியும், சித்த மருத்துவ வரலாறும்” என்ற நூலில் காணப்படுகிறது.

சட்டைமுனி ஞானம்
எண்சீர் விருத்தம்
காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்
கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப்
புகழாகப் பூசை செய்வார் பெண்ணை வைத்தும்
நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்
நம்முடைய பூசையென்ன மேருப் போலே
ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே
உத்தமனே, பூசை செய்வார் சித்தர்தாமே. 1
தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்
சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்
தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும்
சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா
வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்
வாய்திறந்தே உபதேசம் சொன்ன ராகிற்
கோனென்ற வாதசித்தி கவன சித்தி
கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே. 2
கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய்
குறியறிந்து பூசை செய்து பின்பு கேளாய்
மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்
மைந்தனே இவளை நீபூசை பண்ணத்
தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்
திறமாகப் புவனையைநீ பூசை பண்ணு
ஆறியதோர் யாமளையா றெழுத்தை கேளாய்
அவளுடைய பதம் போற்றிப் பூசைபண்ணே. 3
பண்ணியபின் யாமளைஐந் தெழுத்தைக் கேளாய்
பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்த பின்பு
வண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்கு
மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும்
கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருந்தாம்
காயசித்தி விக்கினங்கள் இல்லை யில்லை
உண்ணியதோர் உலகமென்ன சித்தர் சொன்ன
உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே! 4
தியங்கினால் கெர்சித்துத் துரத்துச் சண்ணுஞ்
சீறியர் மிலேச்சரையே சுகத்தி ன்ள்ளே
மயங்கினார் நாலுபா தத்தி னுள்ளும்
மனஞ்செவ்வை யாவதெப்போ தறிவதெப்போ ?
தயங்கினார் உலகத்திற் கோடி பேர்கள்
சாவதும் பிறப்பதுங்கா வடிபோ லாச்சு
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு
சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்தப் பாழே. 5
பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ ?
பரந் தமனஞ் செவ்வையாய் வருவ தெப்போ ?
வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்
மயக்கமற்று நிற்பதெப்போ ? மனமே ஐயோ ?
காழான உலகமத னாசை யெல்லாங்
கருவறுத்து நிற்பதெப்போ ? கருதி நின்ற
கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்
கூடுவது மேதனென்றால் மூலம்பாரே. 6
(பாடல்கள் நிறைவுபெற்றது.)

சட்டைமுனி (நாதர்) சித்தர் தாள் போற்றி !

நல்லோர் பதம் போற்றி! நாயகன் பதம் போற்றி !!

உரோம ரிஷி வரலாறு


உரோமபுரியிலிருந்து ஞானத்தை நாடி தென் தமிழ்நாட்டிற்கு வந்தார் எனவே உரோம ரிஷி என்றொரு கருத்தும், இல்லை, இவரின் உடலில் ரோமம் அதிகம் இருந்த காரணத்தால் உரோம முனி என பெயர் பெற்றிருக்கிறார் என்றொரு கருத்தும் நிலவுகிறது.

ஆனால் அவரோ தன்னைப்பற்றி...

"கால் வட்டம் தங்கி மதி அமுதப் பாலைக்
கண்டு பசியாற்றி மண் சுவடு நீக்கி
ஞால வட்டம் சித்தாடும் பெரியோர் பதம்
நம்பினதால் உரோமன் என்பேர் நாயன் தானே "

பால் : யோக நிலையில் இருக்கும் போது நாம் சிரசில் ஒழுகும் அமிழ்தம் .
ஞால : பரிசுத்த மெய்ஞஞானம்
பதம் : பாதம்

இந்தப் பாடல் அவரது உரோம ரிஷி ஞானம் நூலில் இருந்து...

இந்த ஞானவானின் ஞானத்தை அவரின் பாடல்களே நமக்கு காட்டி தருகின்றன. இதோ ஒரு பாடல்...

தியானத்தைப் பற்றி...

செலுத்துவது முண்ணாக்கி லண்ணாக் கையா!
சென்றேறிப் பிடரிவழித் தியானந் தோன்றும்;
வலுத்ததடா நாலுமுனக் கமுத மாச்சு;
மவுனமென்ற நிருவி கற்ப வாழ்க்கை யாச்சு;
சொலித்திருக்கும் பன்னிரண்டி லிருத்தி யூது
சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு;
பலித்ததடா யோகசித்தி ஞான சித்தி
பருவமாய் நாடிவைத்துப் பழக்கம் பண்ணே.

போலிகளைப் பற்றி....

மூடாமல் சிறுமனப் பாடம் பண்ணி
முழுவதுமவன் வந்ததுபோல் பிரசங் கித்து
வீடேதிங் குடலேது யோக மேது
வீண்பேச்சாச் சொல்லி யல்லோ மாண்டு போனார்?
காடேறி மலையேறி நதிக ளாடிக்
காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே.

தவநிலையைப் பற்றி... 

சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால்
சுடர்போலக் காணுமடா தூல தேகம்;
அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம்
அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான்
பருபதத்தை அசைப்பனெனச் சிற்றெ றும்பின்
பழங்கதைபோ லாச்சுதிந்த யோகம் விட்டால்
வெறுங்கடத்தி லீப்புகுந்த வாறுபோல
வேதாந்த மறியாத மிலேச்சர் தாமே

என உரோம ரிஷி ஞானம் கூறுகிறது.

சித்தர்களாக,ரிஷிகளாக, குருமார்களாக பலரும் வேடமிட்டு, காடுகளுக்கு சென்று ,செழித்து வளர்ந்த கிழங்குகளை தின்று, நதிகளில் நீராடி இறுதியில் காமத் தீயில் அகப்பட்டு முத்தி பெறாமல் மாண்டவர் பலரே எனவும் அவர்களிடையே ஞானம் பெற்று சித்து நிலையை அடைந்தவர் சிலரே எனவும் உரோம ரிஷி ஞானம் சொல்கிறது.

இதோ அப்பாடல்..

"காடேரி மலையேறி நதிகளாடி
காய் கிழங்கு சருகு தின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே "

இவர் சிங்கி வைப்பு, உரோம ரிஷி வைத்திய சூத்திரம், வகார சூதிரம், உரோம ரிஷி முப்பு சூத்திரம் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

நல்லோர் தாள் போற்றி! நாயகன் தாள் போற்றி !!

குறிப்பு : விளக்கங்கள் அனுபவ நிலையல்ல, வெறும் தெரிவு நிலை மட்டுமே.

-உரோம ரிஷி வரலாறு முற்றிற்று-

பாம்பாட்டி சித்தர்

பாம்பாட்டி சித்தர். காரணப் பெயர்கள் சாதாரணமாக மனதைவிட்டு அகலவே அகலாது. அதிலும், படையையே நடுங்கச் செய்யும் பாம்பினை ஆட்டி வைப்பவர் என்பதால், ஒரு பிரமிப்போடு கூடிய பார்வை இந்த சித்தர் மேல் எல்லோருக்கும் உண்டு.

இவரின் தொடக்கம் மிகச் சாதாரணமானது. ஜோகியர் என்னும் மலைக் குடியர் இவர். பளியர், ஜோகியர், படுகர், வடுகர், வட்டகர், என்று அந்த நாளில் மலைகளில் வசிப்பவர்களுக்குப் பெயர்கள் இருந்தன. இவர்களில் ஜோகியர்கள் பாம்பு பிடிப்பதில் சிறந்தவர்கள். இன்றைய இருளர்களுக்கு ஜோகியர்களே முன்னோடிகள். ஒருமனிதனின் பிறப்பானது அவனது முற்பிறவி வினைக்கு ஏற்பவே அமைகிறது. அரசனுக்கு மகனாய்ப் பிறப்பது முதல் ஆண்டியாய் இருப்பது வரை அனைத்தும் கர்மம் சார்ந்ததே. பாம்பாட்டி சித்தரும் கர்மப்படி ஜோகியராய்ப் பிறந்து பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது அதோடு விளையாடுவது இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார். இவர் காலத்திலும், நாகரத்தினங்களுக்காக பாம்புகளைத் தேடுவோர் இருந்தனர். 

பல ஆண்டுகாலத்திற்கு ஒரு பாம்பானது ஒருவரையும் தீண்டாது வாழ்ந்திட, அந்த விஷமானது கெட்டிப்பட்டு கல் போலாகி அந்தப் பாம்பிற்கே அது வினையாகும். அந்தக் கல், அதற்கு வேதனை தரும். எனவே அது அந்த விஷக்கல்லை வெளியேற்ற மிகவும் சிரமப்படும். அப்படி சிரமப்படும் பாம்புகளை கவனித்துக் கண்டறிந்து, கெட்டியான கல்போன்ற அந்த விஷத்தை எடுத்து, அதை நாகமாணிக்கமாகக் கருதி அதிக விலைக்கு விற்பார்கள். 

சிலர் இந்த மாணிக்கத்தை ஒரு தாயத்துக்குள் அடைத்து இடுப்பில் கட்டிக் கொள்வர். இதனால் எதிர்மறை துன்பங்கள் நேராது என்பது நம்பிக்கை. பாம்பாட்டி சித்தரும் பாம்பு பிடிப்பதில் சூரராக இருந்தபோது அவருக்கும் நாகமாணிக்கத்தை தலைமேல் வைத்திருக்கும் பாம்பைத் தேடுவது ஒரு பெரும் லட்சியமாகவே இருந்தது. ஆனால் அந்த மாதிரி பாம்புகள், அவ்வளவு சுலபத்தில் வசப்பட்டுவிடாது. ஒரு நாள், அப்படி ஒரு பாம்புக்காக புற்று புற்றாக கையை விட்டுக் கொண்டிருந்த ஜோகியாகிய பாம்பாட்டி, ஒரு புற்றில் கையைவிட்டபோது, விக்கித்துப் போனார். உள்ளே, ஒரு சித்த புருஷர் தவமியற்றிக் கொண்டிருந்தார். அவர்மேல் பாம்பாட்டியின் கை பட்டுவிட, அவரது தவம் கலைந்தது. முதலில் கோபம் வந்தாலும், ஜோகியர் பிழைப்பே பாம்பு பிடிப்பதுதான் என்பதால், அது உடனேயே தணிந்தது. 

‘‘நீ யாரப்பா...?’’ சித்த புருஷன் கேட்டார். 

‘‘ஜோகிங்க சாமி...’’ 

‘‘அரவம் பிடிப்பதுதான் உன் தொழிலா?’’ 

‘‘ஆமாங்க... பாழாப் போன தொழிலுங்க.. நாகமாணிக்கப் பாம்பு ஒண்ணு சிக்குனா கூட போதும். இந்தப் பொழப்ப விட்றுவேன்.. ’’ 

‘‘ஓ... மாணிக்கக் கல்லுக்காக பாம்புகளை வேட்டையாடுபவனா நீ?’’ 

‘‘இல்லீங்க... கல்லு கிடைக்கட்டும், கிடைக்காமப் போகட்டுங்க. ஊரே பயப்பட்ற பாம்புகளை தைரியமாப் பிடிச்சு, அதை மகுடி ஊதி ஆடவைக்கறது எனக்கு ரொம்ப பிடிக்குங்க... அதுல ஒரு பரவசம் இருக்குங்க!’’ 

‘‘அற்ப பாம்புகளைப் பிடித்து விளையாடுவதில் உனக்கு ஒரு பரவசமா?’’ 

‘‘அட என்னங்க நீங்க... புத்துகட்னது கூட தெரியாம உக்காந்து ஏதோ மந்திரம் சொல்லிகிட்டு இருக்கற உங்களுக்கு, மந்திரம் சொல்றதுல பரவசம்னா, எனக்குப் பாம்பை ஆட்டி வைக்கறதுல பரவசங்க. என் தைரியம் உங்களுக்கு உண்டா?’’ 

‘‘பகலில் வெளியே வர பயந்து கொண்டும், இரவில் இரை தேடியும், கரையான் புற்றுக்குள்ளும், துவாரங்களிலும் புகுந்து கொண்டு சுருண்டு படுத்துக் கொள்ளும் பயத்தின் சொரூபமான பாம்புகளைப் பிடிப்பதும் ஆட்டிவைப்பதுமே உனக்கு ஒரு பெரிய பரவசத்தையும் ஆர்வத்தையும் தருமானால், எனக்குள் இருக்கும் பாம்பை, நினைத்த பொழுதெல்லாம் ஆட்டி வைத்து சதாசர்வ காலமும் நித்ய பரவசத்தில் திளைத்தபடி இருப்பவனான நான், எவ்வளவு கர்வம் கொள்ளலாம் தெரியுமா?’’ 

அவர் கேள்வி, அந்த ஜோகிக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளித்தது. 

‘உங்களுக்குள் ஒரு பாம்பா?’ _ இது முதல் கேள்வி. 

‘நித்ய பரவசத்தில் திளைப்பதில் அவ்வளவு பரவசம் உள்ளதா?’ _ இது அடுத்த கேள்வி... 

அவரும், ‘‘அனுபவித்தால்தானே தெரியும்? சர்க்கரை என்று சொன்னால் இனித்துவிடுமா?’’ என்று திருப்பிக் கேட்க... ஜோகிக்கும் அவருக்கும் இடையே நெருப்பு பற்றிக் கொண்டது. 

‘‘நீங்க சொல்றது ஏத்துக்க முடியாததுங்க சாமி... பாம்பு பிடிக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? உயிர் போகற வாழ்க்கைங்க....’’ 

‘‘அப்படியா... யோகிக்கு அதெல்லாம் ஒரு விஷயமில்லையப்பா... உடம்பை ஆட்டிப் படைக்கத் தெரிந்த யோகிகளை, எந்தப் பாம்பும் எதுவும் செய்யாது... பார்க்கிறாயா?’’ அவர் கேள்வியோடு பக்கத்துப் புற்றில் கையை விட்டு நாகனையும், சாரையையும், கட்டு விரியனையும் வாலைப்பிடித்தெல்லாம் இழுத்து மேனி மேல் விட்டுக் கொண்டார். அவைகளும் அவரிடம் குழந்தை போல விளையாடின. 

ஜோகிக்கு வியப்பு தாளவில்லை. அந்த நொடி,

அந்த நொடி,ஜோகிக்கு தன் தைரியம், பரவசம் எல்லாம் ஓர் அற்பமான எண்ணமே என்பது விளங்கி விட்டது.

‘‘சாமி.... நான் உங்கள மாதிரி சாமியாருங்கள, என்னவோ ஏதோன்னு நினைச்சேன். ஆனா உண்மையில, என்னை நானே இவ்வளவு நாளா ஏமாத்திகிட்டு வந்திருக்கேன்.

சாமி... நான் இனி வெளிய இருக்கற பாம்பைப் பிடிச்சு அதை இம்சை பண்ணமாட்டேன். எனக்குள்ள ஒரு பாம்பு இருக்குன்னு சொன்னீங்களே... அதைப் பிடிக்க எனக்கு சொல்லித் தர்றீங்களா?’’

‘‘அது அவ்வளவு சுலபமல்ல... மன உறுதி, வைராக்யம் இரண்டும் வேண்டும்...’’

‘‘என்கிட்ட அது நிறையவே இருக்குங்க... சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?’’ ஜோகி கேட்க,

சிஷ்யனாக ஏற்பது போன்ற கனிவான பாவனையில் அவரும் பார்க்க, அந்த நொடியே அவருக்கு அந்த ஜோகி சிஷ்யனானான்.

சில…….வருஷத்திலேயே குருவை விஞ்சும் சிஷ்யனாகி விட்டான். குருவின்மேல் ஒரு கம்பளிச் சட்டை கிடந்தது. அழுக்கேறிய சட்டை. ஆனால், அது அவர் உடல் சூட்டை ஒன்றே போல் வைக்க உதவிக் கொண்டிருந்தது. எப்பொழுதும் கம்பளிச் சட்டையுடன் காணப்பட்டதால், சட்டை முனி என்று அழைக்கப்பட்டார் அவர். சிஷ்யன் ஜோகியோ தனக்குள் இருக்கும் பாம்பை ஆட்டிவைக்க வெகுவேகமாகக் கற்றதால், பாம்பாட்டி சித்தர் ஆனார்.

ஒரு சித்து உள்ளே வருவதுதானே கடினம்! அப்படி வந்துவிட்டால், அது வந்த அதே வழியில்தான் வரிசையாக எல்லா சித்துக்களும் வந்துவிடுமே? பாம்பாட்டி சித்தரும் ஜெகஜால சித்தரானார்.

எச்சில் உமிழ்ந்து, அந்த உமிழ் நீரில் தங்கம் செய்வதிலிருந்து, குப்பென்று ஊதி, ஊதிய வேகத்தில் காற்று விசையால் ஒருவரைக் கீழே விழவைப்பதுவரை அவரது சாகசங்களுக்கு ஓர் அளவே இல்லாமல் போயிற்று. ஆனாலும், அவர் அவைகளைப் பெரிதாகக் கருதாமல், யோகத்தைத்தான் பெரிதாகக் கருதினார். உலகத்துப் பாம்புகள், ஒன்றுமில்லாதவை. உள்ளிருக்கும் பாம்போ, சுகத்தின் மூலம் என்று, தானறிந்த உண்மையை உரக்கச் சொல்லத் தொடங்கினார்.

ஒருமுறை, அரசன் ஒருவனை பாம்பு தீண்டிவிட, அவன் மரணித்துவிட்டான். அவனைக் கடித்த பாம்பையும் அடித்துக் கொன்று விட்டனர். அதைக் கண்ட பாம்பாட்டி சித்தர், ஓர் உபாயம் செய்தார். இறந்த பாம்பை எடுத்து, உயிருடன் இருப்பவர்கள் மேல் வீசி வேகமாக எறிய, அவர்கள் பயந்து ஓடினர். தங்களுக்கு உயிர் மேல் இருக்கும் பற்றினை அந்த நொடி வெளிக் காண்பித்தனர்.

அந்த நொடியில்…..உருமாறல் மூலம் அரசன் உடம்புக்குள் புகுந்த பாம்பாட்டி சித்தர், உயிர்த்து எழுந்து அமர்ந்தார். செத்த பாம்புக்கும் உயிர் தந்து, ‘உம் ஆடு’ என்றார்... அதுவோ உயிர் பிழைத்த ஆச்சரியத்தில் ஓடத் தொடங்கிற்று. அரசர் எப்படிப் பிழைத்தார்? அவரால் செத்த பாம்பை எப்படிப் பிழைக்க வைக்க முடிந்தது?

போன உயிர் எப்படித் திரும்பி வரும்? என்றெல்லாம் எல்லோரும் கேள்விகளில் மூழ்கிக் கிடக்க, அரசி மட்டும் சூட்சமமாக அரசரை வணங்கி, ‘‘என் கணவரை உயிர்ப்பித்து நிற்கும் யோகி யார்?’’ என்று கச்சிதமாய்க் கேட்டாள். பாம்பாட்டியாரும் அவளது தெளிவைக் கண்டு வியந்து, தான் யார் என்று உரைத்ததோடு, ‘‘அரவம் தீண்டி இறந்து போகுமளவு ஒரு கர்ம வாழ்வு இருக்கலாமா? இது எவ்வளவு நிலையற்றது... எவ்வளவு அச்சமுள்ளவர்களாக, உயிராசைமிக்கவர்களாக இருந்தால், செத்த பாம்பு மேலே விழுந்ததற்கே இந்த ஓட்டம் ஓடுவீர்கள்..!?’’ என்றெல்லாம் கேட்க, அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர்.

அப்படியே அரசனின் உடலில் இருந்த வண்ணமே, வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார். எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, அகத்துக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார்.

பின்னர், மலைத் தலங்களில் திரிந்து தவம் செய்த இவர், அதிக காலம் வசித்தது கோவை அருகில் உள்ள மருத மலையில் என்பார்கள். கார்த்திகை மாத மிருகசீரிட நட்சத்திரத்தில் அவதரித்ததாக இவர் பற்றி தெரியவருகிறது. இவர், ‘சித்தாரூடம்’ எனும் நூலையும் எழுதியவர்.

மேலும் இவர் எழுதிய பாடல்கள் புகழ் பெற்றவை.

அதில் ஒன்று உடம்பை பற்றி இவர் சொல்லும் ஒருபாடல் இதோ !


ஊத்தை குழிதனிலே மண்ணை எடுத்தே
உதிரப் புனலிலே உண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
வறையோட்டுக்கும் ஆகாது என்று ஆடுபாம்பே " 

குழந்தையை உலகிற்குத் தரும் குழியிலிருந்து, ஐம்பூதங்களில் ஒன்றான
மண்ணைஎடுத்து உதிரப் புனலில் ( இரத்தநீரில்) குழைத்து குயவனாகிய ஈசன் கொடுத்த உடலாகிய இம்மட்பாண்டம் உடைந்துவிட்டால் உபயோகமற்ற மண்ணோட்டிற்குக் கூடப் பயன்படாது என்று ஆடு பாம்பே !!

பொதுவாக சித்தர்கள் எல்லோரும் ஒத்த கருத்து உள்ளவராகவும், பக்தி மார்க்கத்தில் சில சடங்குகளை புறக்கனிப்பவராகவும் உள்ளனர். நான் ஏற்கனவே எழுதி இருந்த சிவவாக்கியாரும் ஒரு பாடலில் கடுமையாக சிலை வழிபாட்டை சாடியிருந்தார் (நட்ட கல்லை தெய்வம் என்று...). இதோ பாம்பாட்டி சித்தரும் தனது பாடலில் சிலை வழிபாட்டை சாடுகிறார்.

இதோ அந்த பாடல்....

உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி
உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி
புளியிட்ட செம்பில் குற்றம் போமோ அஞ்ஞானம்
போகாது மூடர்க்கென்று ஆடாய் பாம்பே


உளியை வைத்து செய்த கல்லாலான சிலையில் உள்ளதா உணர்ச்சி, உலகத்தில் மூடர்களாய் இருப்பவர்களுக்கு உள்ளதா உணர்ச்சி, (துருப்பிடித்ததை போன்ற) புளியிட்ட செம்பின் குற்றம் நீங்குமோ, இவர்கள் இருக்கும் அஞ்ஞானம் ஞானத்தை நோக்கி இவர்களை போக விடாது என்று ஆடு பாம்பே என்கிறார்.

மேலும் இவரது பாடல்கள் ஆன்மிக பாதையில் பயணிப்பவர்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.

உண்மையில் இதை படித்த போது எனக்கு ஏற்பெற்ற உணர்வு மூன்று நாள் பசிக்காரன் அறுசுவை உணவை கண்டதும் ஏற்பெற்ற உணர்வுதான்.

பாம்பாட்டி சித்தர் சொல்கிறார் மேலுமொரு பாடலில்...

நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளும் கழுவினும் அதன் நாற்றம் போமோ
கூறும் உடல் பல நதியாடிக் கொண்டதால்
 
கொண்ட மலம் நீங்காதென்று ஆடுபாம்பே


நாறுகின்ற மீனை பல தடவை நல்ல நீரால் கழுவினாலும் அதன் நாற்றம் போகாது! அது போல பலபேரால் கூறு கூறாக கொண்டு வந்த இந்த உடலானது, புண்ணியம் என்று கூறி புனித நதிகளில் நீராடினாலும் கொண்ட மலம்(மும்மலம் : ஆணவம், மாயை, கன்மம்) போகாது என்று கூறுகிறார்.

இதைபோன்ற தனது பாடல்களில் தான் பெற்ற ஞானத்தை உணர்த்தியிருக்கிறார் பாம்பாட்டி சித்தர்.

இதோ பாடல்கள் ....

தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடு பாம்பே! சிவன்
சீர்பாதங்கண்டு தெளிந்து ஆடுபாம்பே!
ஆடுபாம்பே! தெளிந்து ஆடுபாம்பே! சிவன்
அடியிணை கண்டோமென்று ஆடுபாம்பே!

நீடுபதம் நமக்கென் றுஞ்சொந்தம் என்றே
நித்தியமென் றேபெரிய முத்தி யென்றே
பாடுபடும் போதும் ஆதிபாதம் நினைந்தே
பன்னிப்பன்னிப் பரவி நின்றாடு பாம்பே!

பொன்னில் ஒளிபோலவெங்கும் பூரணமதாய்ப்
பூவின்மணம் போலத் தங்கும் பொற்புடையதாய்
மன்னும் பலவுயிர்களில் மன்னிப் பொருந்தும்
வள்ளலடி வணங்கி நின்று ஆடுபாம்பே!

எள்ளில் எண்ணைபோல உயிரெங்கும் நிறைந்த
ஈசன்பத வாசமலர் எண்ணி யெண்ணியே
உள்ளபடி அன்புபக்தி ஓங்கி நிற்கவே
ஒடுங்கி யடங்கித் தெளிந்து ஆடுபாம்பே!

அண்டபிண்டம் தந்த எங்கள் ஆதிதேவனை
அகலாம லேநினந்தே அன்புடன் பணிந்து
எண்திசையும் புகழ்ந்திட ஏத்தி யேத்தியே
ஏகமன மாகநாடி ஆடு பாம்பே!

சோதி மயமான பரிசுத்த வத்துவை
தொழுதழு தலற்றித் தொந்தோம் தோமெனவே
நீதிதவறா வழியில் நின்று நிலையாய்
நினைந்து நினைந்துருகி ஆடு பாம்பே!

அருவாயும் உருவாயும் அந்தி யாயும்
அந்தமுமாயும் ஒளியாயும் ஆகம மாயும்
திருவாயும் குருவாயும் சீவனாயும்
செறிந்தவத் துவைப் போற்றி ஆடுபாம்பே!

சுட்டிக்காட்டி ஒண்ணாதபாழ் சூனி யந்தன்னைச்
சூட்சமதி யாலறிந்து தோஷ மறவே
எட்டிபிடித் தோமென் றானந்த மாகப்பை
எடுத்து விரித்துநின் றாடு பாம்பே

எவ்வுயிரும் எவ்வுலகு ஈன்று புறம்பாய்
இருந்து திருவிளையாட் டெய்தியும் பின்னர்
அவ்வுயிரும் அவ்வுலகும் ஆகியுநின்ற
ஆனந்த வெள்ளங்கண் டாடு பாம்பே

இவை அனைத்தும் ஒருதலைப்பின் கீழ் வந்த ஒன்பது பாடல்கள் ஆகும்.

மேலும் பல பாடல்கள் இருக்கின்றன.

பாம்பாட்டி சித்தர் தொடர் நிறைவு பெற்றது.