Friday, 28 August 2015

பதினெண் சித்தர்கள் சமாதி அடைந்த தலங்கள்

பதினெண் சித்தர்கள் சமாதி அடைந்த தலங்கள்

சித்ரா பலவேசம்


பதினெண் சித்தர்கள் சமாதி அடைந்த தலங்கள் என குறிப்பிடப்படும் இடங்கள் கொண்ட பட்டியல்

1. கொங்கணவர் - திருப்பதி

2. போகர் - பழநி

3. திருமூலர் - சிதம்பரம்

4. பாம்பாடம்சித்தர் - விருத்தாச்சலம்

5. இடைக்காட்டுச்சித்தர் - திருவண்ணாமலை

6. சச்சிதானந்த சுவாமி - வள்ளிமலை

7. கோரக்கர் - போரூர்

8. நந்தீசர் - காசி

9. குதம்பை சித்தர் - மாயவரம்

10. கமலமுனிவர் - திருவாரூர்

11. வான்மீகர் - எட்டக்குடி

12. கட்டமுனிவர் - ஸ்ரீரங்கம்

13. மச்சமுனிவர் - அழகர்கோவில்

14. ராமதேவர் - மதுரை

15. கந்தாநத்தித்தேவர் - வைத்தீஸ்வரன் கோயில்

16. தன்வந்திரி - ராமேஸ்வரம்

17. பதஞ்சலி முனிவர் - திருவனந்தபுரம்

18. கும்பமுனிவர் - சப்தகிரி


108 சித்தர்களின் பெயர்கள்

108 சித்தர்களின் பெயர்கள்

1. திருமூலர். 
2. போகர்.
3. கருவூர்சித்தர்.
4. புலிப்பாணி.
5. கொங்கணர்.
6. மச்சமுனி.
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்.
8. சட்டைமுனி சித்தர்.
9. அகத்தியர்.
10. தேரையர்.
11. கோரக்கர்.
12. பாம்பாட்டி சித்தர்.
13. சிவவாக்கியர்.
14. உரோமரிசி.
15. காகபுசுண்டர்.
16. இடைக்காட்டுச் சித்தர்.
17. குதம்ப்பைச் சித்தர்.
18. பதஞ்சலி சித்தர்.
19. புலத்தியர்.
20. திருமூலம் நோக்க சித்தர்.
21. அழகண்ண சித்தர்.
22. நாரதர்.
23. இராமதேவ சித்தர்.
24. மார்க்கண்டேயர்.
25. புண்ணாக்கீசர்.
26. காசிபர்.
27. வரதர்.
28. கன்னிச் சித்தர்.
29. தன்வந்தரி.
30. நந்தி சித்தர்
31. காடுவெளி சித்தர்.
32. விசுவாமித்திரர்
33. கௌதமர்
34. கமல முனி
35. சந்திரானந்தர்
36. சுந்தரர்.
37. காளங்கி நாதர்
38. வான்மீகி
39. அகப்பேய் சித்தர்
40. பட்டினத்தார்
41. வள்ளலார்
42. சென்னிமலை சித்தர்
43. சதாசிவப் பிரம்மேந்திரர்
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார்
45. ராகவேந்திரர்
46. ரமண மகரிஷி.
47. குமரகுருபரர்
48. நடன கோபால நாயகி சுவாமிகள்
49. ஞானானந்த சுவாமிகள்
50. ஷீரடி சாயிபாபா
51. சேக்கிழார் பெருமான்
52. ராமானுஜர்
53. பரமஹம்ச யோகானந்தர்
54. யுக்தேஸ்வரர்
55. ஜட்ஜ் சுவாமிகள்
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார்.
58. சிவப்பிரகாச அடிகள்.
59. குரு பாபா ராம்தேவ்
60. ராணி சென்னம்மாள் (பெண் சித்தர்)
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி
62. குழந்தையானந்த சுவாமிகள்.
63. முத்து வடுகநாதர்.
64. இராமதேவர்
65. அருணகிரிநாதர்.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள்
67. மௌன சாமி சித்தர்
68. சிறுதொண்டை நாயனார்.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள்.
70. வல்லநாட்டு மகாசித்தர்.
71. சுப்பிரமணிய சித்தர்.
72. சிவஞான பாலசித்தர்.
73. கம்பர்.
74. நாகலிங்க சுவாமிகள்.
75. அழகர் சுவாமிகள்.
76. சிவஞான பாலைய சுவாமிகள்
77. சித்தானந்த சுவாமிகள்.
78. சக்திவேல் பரமானந்த குரு
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்
80. அக்கா சுவாமிகள்
81. மகான் படே சுவாமிகள்
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள்
83. பகவந்த சுவாமிகள்.
84. கதிர்வேல் சுவாமிகள்.
85. சாந்த நந்த சுவாமிகள்
86. தயானந்த சுவாமிகள்
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள்.
89. வேதாந்த சுவாமிகள்
90. லஷ்மண சுவாமிகள்.
91. மண்ணுருட்டி சுவாமிகள்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்).
94. கோட்டூர் சுவாமிகள்.
95. தகப்பன் மகன் சமாதி
96. நாராயண சாமி அய்யா சமாதி
97. போதேந்திர சுவாமிகள்
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்.
99. வன்மீக நாதர்.
100. தம்பிக்கலையான் சித்தர்
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்
102. குகை நாச்சியார் மகான்.
103. வாலைகுருசாமி.
104. பாம்பன் சுவாமிகள்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள்.
106. பெரியாழ்வார் சுவாமிகள்
107. மாயம்மா (பெண் சித்தர்)
108. பரமாச்சாரியார்.

(மலை வாழ் வாழ்கை - புத்தகத்தில் இருந்து பெறப்பட்டது )

கோபுர தரிசனத்தின் மாண்பும் மகத்துவமும்





"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்பது பழமொழி என்பதைக் விட அதை ஒரு வாழ்வியல் தத்துவமாய் கருதிட வேண்டும். ஆலய வழிபாட்டுக்கு செல்ல இயலாதவர்கள் கூட தூரத்தே இருந்து கோபுரத்தை வணங்கிச் செல்வதை இன்றைக்கும் காண முடியும்.

கோபுரங்களை ஸ்தூல லிங்கமாகவும், இறைவனின் பாதங்களாகவும் பாவித்தனர். கோபுர வழிபாடு முழுமையான ஆலய வழிபாட்டுக்கு இனையானது என்ற நம்பிக்கை காலம் காலமாய் இருந்து வருகிறது.

சிற்ப சாஸ்திரத்தின் படி கோவில்களின் அமைப்பானது மனித உடலின் வடிவத்தில் அமைய வேண்டுமென வரையறுத்திருக்கின்றனர். இதனை "ஷேத்திரம் சரீர பிரஸ்தாரம்" என்பர்.

இதனையே திருமூலரும்...

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே"

என்று கூறுகிறார்.

எளிமையாய் விளக்குவதானால்

பாதங்கள் - முன்கோபுரம்
முழங்கால் - ஆஸ்தான மண்டபம்
துடை - நிருத்த மண்டபம்.
தொப்புள் - பலி பீடம்
மார்பு - மகாமண்டபம் ( நடராஜர்)
கழுத்து - அர்த்த மண்டபம் (நந்தி)
சிரம் - கர்ப்பகிரகம்
வலது செவி - தக்ஷிணா மூர்த்தி
இடது செவி - சண்டேஸ்வரர்.
வாய் - ஸ்நபன மண்டப வாசல்
மூக்கு - ஸ்நபன மண்டபம்
புருவ மத்தி - லிங்கம்.
தலை உச்சி - விமானம்.

"தேஹா தேவாலய: ப்ரோக்தோ ஜீவோ தேவ: ஸனாதன:
த்யஜோத்: அஞ்ஞான நிர்மால்யம் ஷோகம் பாவேன பூஜயேத்" என்ற வேத வாக்காலும் இதனை அறியலாம்.

கற்ப மூலிகை சருமத்தைக் காக்கும் குப்பைமேனி..

மூலிகைகள் என்றால் ஏதோ பெரிய மலைக்காடுகளில் காணப்படுவது என பலர் நினைக்கலாம். மலைக்காடுகளிலும் மூலிகைகள் வளர்கின்றன. அதேபோல் நம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் ஏராளமன மூலிகைகள் வளர்கின்றன. நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை.


மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. 
அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. அதில் குப்பைமேனியும் ஒன்று.

குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்தது. இவை தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருப்பதைக் காணலாம். இது இந்தியா முழுவதும் வளரும் செடியாகும்.

குப்பைமேனியை மார்ஜலமோகினி என வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
எனினும் தமிழில் கூறப்பட்டது போல் குப்பைமேனியின் மருத்துவப் பயன்கள் குறிப்பிடப்படவில்லை.

மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும், இலைக்காம்பு 
இடுக்கிலமைந்த பூக்களையும் கொண்டது. இதற்கு அரி மஞ்சரி, பூனைவணங்கி, 
மேனி என்ற பல பெயர்கள் உண்டு.

Tamil - Kuppaimeni

English - Indian acalypha

Telugu - Kuppi-Chettu

Malayalam - Kuppa-meni

Sanskrit - Arittamajarie

Botanical name - Acalypha indica

இதன் இலை, வேர், சமூலம், (முழுச் செடியும்) மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது.

தந்தமூ லப்பிணிதீத் தந்திருபுண் சர்வவிடம்
உந்துகுன்மம் வாதம் உதிரமூ - லந்தினவு
சூலஞ்சு வாசம் தொட்ர்பீ சங்கபம்போம்
ஞாலங்கொள் மேனியத னால்

தேரையர் குணபாடம்

பொருள் - குப்பைமேனி இலையால், பல்நோய், தீச்சுட்டப் புண், பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, வளிநோய், மூலம், நமைச்சல், குத்தல், இரைப்பு, மூக்குநீர் பாய்தல், கோழை போன்றவை தீரும்.

வயிற்றுப் புழுக்கள் நீங்க

குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.

சொறி, சிரங்கு நீங்க

குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.

இலைமேனி யியறிவிளக் கெண்ணெயின்மெய்
யிலயட்டியிலை மேனியை யா

அகத்தியர் குணவாகடம்

பொருள் - குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும்.

குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும்.

குப்பைமேனி இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி ஒருமண்டலம் கற்ப முறைப்படி உண்டு வந்தால் வாய்வுப்பிடிப்பு நீங்கும். சரும நோய்கள் அகலும். சுவாச நோய்கள் நீங்கும். குடல் புழுக்கள் வெளியேறும். மூல நோயின் தாக்கம் குறையும்.

குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் படுக்கைப் புண் மீது கட்டி வந்தால் புண் விரைவாக ஆறிவிடும்.

குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி முதலியவை குணமாகும்.

மூலம், பவுத்திர நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.

குப்பைமேனி சமூலத்தை எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் 8 விதமான பவுத்திர நோய் தீரும் என தேரையர் காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் வெளியேறும்.

குப்பைமேனி செடிகளை குப்பையென எறியாமல் தேவைக்கேற்ப பயன்படுத்தி நலம் பெறுவோம்.


பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை.!


யுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை உச்சரிப்பதற்கு முன் நாடி சுத்தி செய்து கொண்டு, மந்திரங்களை மூச்சுப் பயிற்சியோடு கலந்து அதிகாலையும், மாலை வேளைகளிலும் உச்சரித்து பிராண சக்தியை அதிகப்படுத்திக் கொண்டார்கள் நம் முன்னோர்களான ரிஷிகளும், சித்தர்களும். இன்று விஞ்ஞானம் மனித உடற் கூறுகளைப்பற்றி ஆராயும் போது, அதில் பிராண சக்தியே எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இயங்குவதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதையே ஆக்சிஜன் என்ற விஞ்ஞானப் பெயரால் வழங்குகிறார்கள். 

இப்போது நாம் மணற்பரப்புகளாக காண்பவை எல்லாம் யுகங்களுக்கு முன்பு மலைகளாகவும் காடுகளாகவும் இருந்தவையே. இயற்கையின் சீற்றங்களாலும், நீரின் அடித்துச் செல்லும் வேகத்தாலும், காற்றாலும், தாவரங்களின் வேர்களாலும் உடைக்கப்பட்டு தூளாகிய பாறைத் துகள்களே இந்த மண். இவையெல்லாம் கோடிக்கணக்காண ஆண்டுகளாக நடந்த மாற்றம். இன்னும் பூமியுள்ள காலம் வரையும் நடக்கும். அப்படி ஒரு காலத்தில் மலைப் பாங்கான பகுதி அதிகமாக இருந்த போது, அங்கு வாழ்ந்து வந்த ரிஷிகள் முனிவர்கள், சித்தர்கள் அங்கு காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பதால், குறைந்த காற்றில் இருந்து நிறைய பிராண சக்தியைப் (ஆக்சிஜனை) பெற கண்டுபிடித்த பயிற்சியே பிராணாயாமம். 

மேலும் பிராணாயாமம் மூலம் உடல் திசுக்களில் எல்லாம் ஆக்சிஜனாகிய பிராண சக்தியை நிரப்பி, மனதினால் அந்த ஆக்சிஜனை குண்டலினி என்கிற சேமிக்கப்பட்ட பிராண சக்தியோடு கலந்து தவ சக்தி மூலம் அதை ஓஜஸாக்கி, சுழுமுனை நாடியைத் திறந்து, அது வழியாக மேலேற்றி மூளைப் பகுதியில் உற்பத்தியாகும் தேஜஸ் என்கிற சுரப்பியோடு கலந்து அழியா தேகமும் ஆன்மிக ஞானமும் பெற்றார்கள். ஆன்மிக வாழ்வாகட்டும், இல்லற வாழ்வாகட்டும் விந்துவானது பிராண சக்தி அதிகமாகக் கொண்டு விளங்க வேண்டும். அதற்கு பிராணாயாமம் மிகவும் பயன்படும். முக்கியமாக, குழந்தை பாக்கியத் தடையில் உயிரணுக்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி ஒரு வரப்பிரசாதம். பெண்களுக்கு ஏற்படும் குழந்தை பாக்கியத்தடை சிக்கலில் இந்தப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் பெரும்பாலான தடைகள் நீங்கும். 

மேலும் ஒரு இரகசியம் என்ன வென்றால் உடலில் காரத் தன்மையையும், அமிலத் தன்மையையும் தீர்மானிப்பது ஆக்சிஜனே. இந்த இரு தன்மைகளே ஆண் குழந்தையா, பெண் குழழ்தையா என்பதையும் முடிவு செய்கின்றன. பெண்களுக்கு குழந்தை பாக்கியத் தடை ஏற்படும் காரணங்களைப் பற்றி பார்த்தால், 

1. பாதிக்கட்ட பெண்ணின் பாலுறுப்புகளில் இருந்து தகவல் மூளைக்கு செல்வதில்லை. 

2. பாதிக்கப்பட்ட பெண்ணின் உறுப்புகளின் செல்பாட்டிற்கான கட்டளைகள் மூளையில் இருந்து வருவதில்லை. 

3. பெண்ணின் உறுப்புகளில் உள்ள திசுக்களுக்கு தேவையான புரத உற்பத்திக்கான நொதிகள் நாளமில்லா சுரப்பிகளான பிட்யூட்டரியிலிருந்தும், அட்சினல் சுரப்பியிலிருந்தும், கருவகங்களில் இருந்தும் சுரக்காதது அல்லது அதற்கான கட்டளை மூளையிலிருந்து வராதது. 

4. சரியான உணவுப் பழக்கம் இல்லாதது. 

5. ஆக்சிஜன் பற்றாக் குறை. 

6. பாலின உறுப்புகளில் இருந்து கழிவுகள் நீங்காமல் இருப்பது. 

இந்தக் காரணங்களால் கருமுட்டை உற்பத்தி ஆகாமல் போவது, கொழுப்பு திரண்டிருப்பது, கருப்பை மூடியிருப்பது, மாதத் தீட்டு ஏற்படாமல் இருப்பது போன்ற குறைகள் ஏற்படும். இதில் பிராணாயாமம் எப்படி இந்த பிரச்சனையை சீர் செய்யும் என்றால், இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும் போது, அதிகப்படியான ஆக்சிஜன் திசுக்களுக்கு கிடைக்கிறது. கார்பன் டை ஆக்சைடு அதிக அளவில் வெளியேறுகிறது. பெண்களின் பாலுறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கும் படிக்கு நரம்புகளின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன(தகவல், கட்டளை ஒருங்கிணைப்பு). திசுக்களின் கடினத் தன்மை போய் மென்மை அடைகிறது. இ,த்த பிளாஸ்மா பெண்களின் பாலுறுப்புகளுக்கு எளிதாகச் செல்கிறது. 

இரத்தத்தில் ஆக்சிஜன் அடர்வு அதிகரிப்பும், திசுக்களில் கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பும் ஏற்பட்டு, பரிமாற்ற வேகம் அதிகரிக்கிறது. இதனால் பெண்ணின் உறுப்புகளின் செயல்பாடுகள் மிகுந்திடுகின்றன. இதோடு கூட சலபாசனம், தனுராசனம்,பஸ்சிமோத்தாசனம், ஹாலாசனம், சர்வாங்காசனம், மத்ஸ்யாசனம், சிரசாசனம். யோகமுத்ரா, பத்மாசனம், உட்டியாணம், நௌலி, சவாசனம் போன்ற ஆசனங்களையும் கற்று செய்து வந்தால் மிக விரைவில் பலன் கிடைப்பதோடு, அறிவான ஆரோக்யமான பிள்ளைகள் பிறக்கும் என்பது உறுதி. ஆண்களும் குழந்தை பாக்யத் தடை நீங்க இந்த ஆசனங்களையும், பிராணாயாமம் பயிற்சியையும் செய்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். தனுராசனமும், யோக முத்ராவும் ஆண்கள் செய்ய வேண்டியதில்லை. அர்த்த மத்ஸ்யேந் திராசனம் செய்வது நல்லது. பிராணாயாமம் செய்யும் போது உட்டியாணா ஜாலந்திர மூலபந்தங்களுடன் கும்பகம் செய்ய வேண்டும். இதனால் ஆண் இனப்பெருக்க மண்டலங்களுக்கு இரத்த நாளங்கள் அதிகமாக இரத்தத்தை அளிக்கும். 


ஆக்சிஜன் குறைபாடு உள்ளவர்களுக்கு உடலில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். அமிலத்தன்மை அதிகம் உள்ளவர்களுக்கு பெண்குழந்தைகள் பிறக்கும். ஆக்சிஜன் அதிக அளவு பெறுகிற உடல் அமைப்பு பழக்க வழக்க முள்ளவர்களுக்கு காரத்தன்மை அதிகமான உடல் அமைப்பு இருக்கும். இவர்களுக்கு ஆண் குழந்தைகள் அதிகம் பிறக்கும். மலைப் பிரதேசங்களில் ஆண்குழந்தைகளைவிட பெண்குழந்தைகள் அதிகம் பிறப்பதன் காரணம் இதுதான். ஆக்சிஜன் நம் உடலில் வெப்பக் கட்டுப்பாட்டுக் காரணியாகத் திகழ்கிறது. புரதங்களை உற்பத்தி செய்கிறது. வளர்சிதை மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இதயத்தின் இடது ஆரிக்கிள், இடது வெட்ரிக்கிள் அறைகளில் ஆக்சிஜன் செல்லும் போது மின் சக்தியை இரத்தத்திற்கு அளிக்கிறது. இந்த மின் சக்தி நம் உடல் முழுவதும் பரவயிருக்கிறது.

இறையிடம் தஞ்சம்


இறையிடம் தஞ்சம்


தடம் தெரியாத பாதை
இதில் தடுமாற்றம் ஆயிரம் 
இனம் புரியாத சுகம் 
இதனை இகழ்வோர் பல்லாயிரம்
உரமுள்ள நெஞ்சம் வேண்டி
இறையிடம் தஞ்சம் !

மகா அவதார் பாபாஜி


பாபாஜி கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கி.பி.30.11.1203 அன்று கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத் திருநாளன்று ரோகிணி நட்சத்திரம் ரிஷபராசி கூடிய சுப வேளையில் பிறந்தார். அவருடைய குழந்தை திருநாமம் நாகராஜ். அவருக்கு 11 வயதானபோது கி.பி.1214ல் இலங்கை சென்று கதிர்காமம் என்னும் திருத்தலத்தில் மகா சித்தர் போக நாதரை சந்தித்தார். பாபாஜி கி.பி.1203 ல் தம் பிறப்பு கி.பி. 1214 கதிர்காமம் சென்று போகரை சந்தித்தது பற்றியும் கி.பி.1952ல் ஒளி உடலோடு சென்னை வந்து எழும்பூர், சூரம்மாள் தெரு, 9ம் எண் வீட்டிலுள்ள தம் சீடர் V.T நீலகண்டன் பூஜையறையில் அவரை சந்தித்து அவரிடம் பலமுறை கூறியுள்ளார். ( போகநாதர் கதிர்காமம் தேவாலயம் முருகன் கோவிலாக எழுவதற்கு முன் அந்த கோவிலில் இரண்டு முக்கோணங்களாலான மிகவும் சக்தி வாய்ந்த ஒரு யந்திரத்தை பிரதிஷ்டை செய்தார். கதிர்காமம் திருக்கோவிலின் மூலஸ்தானத்தில் இப்போதும் உருவச்சிலை கிடையாது. அந்த யத்திரத்திற்குத்தான் வழிபாடு நடக்கின்றன.)


கதிர்காமம் சென்ற பாபாஜி அங்கு மகா சித்தர் போக நாதரை குருவாக அடைந்தார். மிகப்பெரிய ஆலமரத்தடியில் போக நாதர் அவருக்கு தொடர்ந்து 6 மாத காலம் கிரியா யோகப் பயிற்சி அளித்தார். இப்பயிற்சி இடைவிடாமல் தொடர்ந்து நடந்தது. இப்பயிற்சியில் 18 வகையான ஆசனங்கள், பல்வேறு பிராணயாமப் பயிற்சிகள் தியானமுறைகள் ஆகியவை அடங்கும். இந்த தவயோக பயிற்சி ஒவ்வொரு முறையும் 24 மணி நேர பயிற்சியாக தொடர்ந்தது. பிறகு விட்டு விட்டு இரண்டு அல்லது மூன்று நாடகளுக்கு ஒரு முறை என்று வளர்ந்தது. இது வார கணக்காக பெருகி இடைவிடாமல் 48 நாட்களுக்கு செய்யும் அளவிற்கு உயர்ந்தது. ஆறு மாத முடிவில் பாபாஜியின் மனதில் ஐம்புலன்களின் வழியே உலகியலோடு தொடர்பு கொள்ளும் நிலை அகன்றது. வேறு வகையில் கூறினால் மனிதனின் 36 தத்துவங்களில் 20 தத்துவங்களால் ஆன மனோதேகமே அவருக்கு இல்லாமல் போய்விட்டது. அல்லது அவரது மனித மனம் அவரது ஆன்மாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. 

பாபாஜி ஒளி உடலோடும் பூத உடலோடும் வாழும் மனிதராகவே விட்டார். எல்லா தத்துவங்களையும் ஏகத்துவமான ஆன்மாவே தான் என்பதை உணர்ந்தார். அதன்மூலம் தாம் வேறு பரம்பொருள் வேறு அல்ல என்பதை தெளிவாக உணர்ந்து விட்டார். 

தன்னை உணர்ந்த பாபாஜி கி.பி.1214லிலேயே தம் குருநாதர் போகநாதர் ஆணைக்கிணங்க இலங்கையில் இருந்து தமிழகம் வந்தார். பொதிகை மலையில் ஒளி உடலுடன் வாழ்ந்துவரும் போகரின் குருவான அகத்தியரிடம் கிரியா யோகத்தின் கடைசி தீட்சையைப் பெற திருகுற்றால மலையை அடைந்தார். (அகத்தியரே ஆதிகுருவும், கிரியா யோகத்தின் மூலகுருவும் ஆவார்.)

குற்றால மலையில் பாபாஜி அகத்தியரை நினைத்து 48 நாள் கடுந்தவம் புரிந்தார். 48ம் நாள் முடிவில் அகத்தியர் ஒளி உடலோடு அவர் முன் தோன்றி அவரை உள்ளம் குளிர வாழ்த்தி அருளினார். அதோடு "மகனே நீ இமய மலைக்கு சென்று பத்ரிநாத்தில் தங்கி தவ வாழ்க்கை வாழ்ந்து வருவாயாக" "நீ இது வரை உலகம் காணாத அளவிற்கு மிகப்பெரிய சித்த புருஷனாக உயர்ந்து உலகம் உள்ளளவும் வாழ்ந்து வருவாய்" என்று வாழ்த்தி மறைந்தார். 

ஆதிகுரு அகத்தியர் ஆணைப்படி பாபாஜி இமய மலையின் ஒரு முகட்டில் தவக்குடில் அமைத்துக்கொண்டு இன்றும் வாழ்ந்து வருகிறார். பாபாஜியின் தவக்குடில் இமயமலையில் 10000 அடி உயர்த்திற்கு மேல் உள்ள பத்ரி நாத் கோவிலிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. அந்த தவக்குடிலுக்கு கொரிசங்கர் பீடம் என்று பெயர்.

பாபாஜி தம் இமாலய வாழ்க்கையில் 12 ஆண்டுகளுக்கு பாரத நாட்டிற்கு வந்து செல்கிறார். கிரியா யோகத்தின் விளைவாக அவரது உடலில் உள்ள எல்லா உயிரணுக்களும் தெய்வீக அணுக்களாய் மாறி உள்ளதால். அவர் தோன்றி 1800 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட 16 வயது சிறுவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

கடவுளைக் காணும் ஆர்வம் மிக்கவர்களாகவும் கடவுளை காணும் வழி தெரியாமல் தவித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு உதவி செய்து வாவர்கள் தெய்வீக உணர்வை பெறுவதற்கு உதவி செய்வதையே பாபாஜி தம் குறிக்கோளாக கொண்டிருக்கிறார். இந்த தெய்வீக ஞானத்தை பெற்றிடும் மக்கள் இதை யாரிடம் இருந்து பெற்றோம் என்று அறிந்துகொள்ள முடியாத நிலையில் கூட கிரியாயோகப்பயிற்சியை அளித்து வருகிறார்கள்.


கிரியா யோகப்பயிற்சியை லாஹிரி மகாசாயா மூலம் உலகம் முழுவதும் பரவச்செய்ய பாபாஜி முடிவு செய்துவிட்டார். ராணுவத்தில் பணி செய்து கொண்டிருந்த மகாசாயா பாபாஜியின் மூலம் தடுத்தாட்கொள்ளப்பட்டார். 

லாஹிரி மஹா சாயர் (மஹா அவதார் பாபாஜியின் சீடர்) 

மஹா அவதார் பாபாஜி இந்த உலகத்திற்கு தெரிய, பாபாஜி பயன்படுத்திய முதல் கருவி லாஹிரி மஹா சாயர் தான்.மஹா அவதார் பாபாஜி முதலில் காட்சி கொடுத்தது இவருக்கு தான். கிரியா யோகத்தை முதலில் பாபாஜி கற்று கொடுத்தது இவருக்கே. இவரின் இயற்பெயர் ஷாமா சரண் லாஹிரி. அனைவரும் இவரை லாஹிரி மகாசாயா என்று அழைத்தார்கள்.(மகாசாயா என்றால் விசாலமான அறிவு உடையவர் என்று பொருள்.)

குழந்தை பருவம் :

இவர் 30 தேதி, செப்டம்பர் மாதம்,1828 -ல் வங்காள மாநிலம், நதியா மாவட்டத்தில், குர்னி என்ற கிராமத்தில் பிறந்தார்.இவரது பெற்றோர் கௌர் மோகன் லாஹிரி மற்றும் முக்தாக்ஷி .பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் சிறுவதிலேயே, அவரின் அன்னை இறந்து விட்டார். லாஹிரி மகாசாயர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். நான்கு வயதில் இருந்தே தியானம் செய்வதைக் கற்றுக் கொண்டார். தலையைத் தவிர மற்ற உடல் பகுதி முழுவதும் மண்ணுள் புதைத்துக் கொள்ளும் தியான முறையை கையாண்டார்.

அவரது வீடு, ஒரு பெரும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. ஆகவே அவர் குடும்பதினோடு வாரணாசிக்கு சென்றார்.தான் வாழ்நாளின் மீத பகுதியை அங்கேயே கழித்தார். பிள்ளை பருவத்திலேயே ஹிந்தி, உருது அறிந்திருந்தார். பின்னர் பெங்காலி, சமஸ்கிருதம், பாரசீகம்,பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தை அரசு சமஸ்கிருத கல்லூரியில் கற்று கொண்டார். கங்கையில் நீராடி விட்டு, வேதங்களையும், புராணங்களையும் அங்கேயே கற்று கொண்டார்.

இளமைப் பருவம் :
 

கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ,ஆங்கிலேய ராணுவத்தில் கணக்காளராக பணி ஆற்றினார். 1846 -ல் ஸ்ரீமதி காஷி மோனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள்.லாஹிரி மாஹசாயரின் தந்தை இறந்த பின், குடும்ப பொறுப்பை தானே ஏற்றார்.

அப்போது மகாசாயவிற்கு 33 வயது.1861 -ல், இமாலயத்தின் அடிவாரத்தில் உள்ள "ராணிகட்" என்ற இடத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அதுதான் அவர் வாழ்கை முறையில் ஒரு திருப்பத்தைக் கொண்டு வந்தது. ராணிகட் சென்றவுடன் மகாசாயவிற்கு கிடைத்த முதல் செய்தி அந்தப் பகுதி ஏராளமான ஞானிகள் வாழும் பகுதி என்பதுதான். அந்த ஞானிகளை காண வேண்டும் என்ற மிகுந்த ஆசையில் அவர் மலை மீது ஏறினார்.

மஹா அவதார் பாபாஜி ஆட்கொள்ளல்:

அவர் மலைப் பாதையில் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு குரல் அவரை அழைத்தது. மேலும் அவர் அக்குரலை கேட்டுக் கொண்டே மலையின் மீது ஏறிச் சென்றார். அப்போது தான், கிரியா யோகத்தின் ஒளி விளக்கான "மஹா அவதார் பாபாஜி" யை சந்தித்தார். 

அப்போது அவரை மஹா அவதார் பாபாஜி தன் முதல் சீடராக ஏற்றுகொண்டார். கிரியா யோக வித்தைகளை அவருக்கு கற்று தந்தார். உலகுக்கு எல்லாம் கிரியா யோகத்தைப் பரப்புமாறு மஹா அவதார் பாபாஜி, லாஹிரி மகாசாயருக்கு கட்டளை இட்டார். 

பின்பு அவர் வாரணாசிக்கே திரும்பி வந்து, கிரியா யோகத்தைப் பற்றியும், மஹா அவதார் பாபாஜியை பற்றியும் எல்லாருக்கும் எடுத்து உரைத்தார். அங்குள்ள அனைத்து மக்களும் கிரியா யோகத்தை தெரிந்துகொள்ள முனைந்தனர்.

லாஹிரி ஒரு குழுவை அமைத்து கிரியா யோகத்தை பற்றி மக்கள் அறியுமாறு செய்தார். கிரியா யோகத்திற்கு மதம் முக்கியம் இல்லை. ஆகவே இந்து,முஸ்லிம், கிறிஸ்து ஆகிய மதத்தினருக்கும் கற்று தரப்பட்டது.

1886 வரை கிரியா யோகத்தின் ஆசிரியராக விளங்கினார். பின்பு அனைத்து மக்களும் அவரது தரிசித்து சென்றனர். 26 செப்டம்பர், 1895 -ல் , தன் அறையில் அமர்ந்து யோகம் செய்து கொண்டிருக்கும் போது, அனைவரது பார்வையின் எதிரே யோக நிலையிலேயே இறைவன் அடிசேர்ந்தார்.

இவருக்கு பின், அவரின் சீடர்களான ஸ்ரீ பஞ்சனன் பட்டாச்சார்யா, ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர், ஸ்ரீ யுக்தேஸ்வர், சுவாமி பிரபானந்தா, சுவாமி கேஷபானந்தா போன்றோரால் கிரியா யோகம் மக்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. 

சென்னை சாந்தோம் பகுதியில் பாபாஜி ஆஸ்ரமம் ஒன்று உள்ளது. இங்கு வழிபாட்டுக் கூடமும் பயிற்சிக்கூடமும் உள்ளன.

பாபாஜி அய்யா திருவடி போற்றி.

மகாசாயா அய்யா திருவடி போற்றி.

முற்றும்.